
ரவாங், மே-11 – உகாதி தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி சிலாங்கூர் ரவாங்கில் தேசிய அளவிலான திறந்த இல்ல பொது உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது.
ரவாங், மலேசிய தெலுங்கு அகாடமியில் சனிக்கிழமை நடைபெற்ற அவ்விழாவுக்கு, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகைப் புரிந்தார்.
மலேசியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் சுபாஷினி நாராயணன், மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் Dr எஸ். வெங்கட பிரதாப் உள்ளிட்டோரும் பங்கேற்ற இவ்விழாவில், 1,300-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவருமான சத்தியா சுதாகரன், தமதுறையில் உகாதி பண்டிகை குறித்து விளக்கமளித்தார்.
வரவேற்புரையாற்றிய Dr வெங்கட பிரதாப், மலேசிய தெலுங்கு சமூகத்திற்கும் அரசாங்கத்தின் ஆதரவு வேண்டும்; இல்லையென்றால் அவர்கள் முன்னேறிச் செல்வது கடினமென குறிப்பிட்டார்.
குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய துணையமைச்சர் சரஸ்வதி, வேற்றுமைக்குள் ஒற்றுமை என்ற உணர்வோடு அனைத்து சமூக நடவடிக்கைகளையும் தமதமைச்சு ஆதரித்து வருவதாகக் கூறினார்.
தமிழரோ, தெலுங்கரோ, சீனரோ, யாராக இருந்தாலும் மடானி அரசாங்கம் அரவணைத்துச் செல்லுமென அவர் உறுதியளித்தார்.
2024 SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் நற்சேவையாளர்களும் சரஸ்வதி விருதுகளை எடுத்து வழங்கினார்.
தெலுங்கு கலாச்சார படைப்புகள், Dhatubhajana, குச்சிப்பிடி நடனம் உள்ளிட்ட படைப்புகளும் வந்திருந்தோரை கவர்ந்தன.