
ஜெனிவா, மே-26- காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாடு விரைவாகச் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதோடு இபோலா பாதிப்புக்கு அருகேயுள்ள எல்லையோர நாடுகள் அதிக அபாயத்தில் இருப்பதால் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Ghebreyesus) கேட்டுக் கொண்டார்.
மேலும் இன்று தாம் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த நோய் பரவலைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதத்தால், தொற்று பரவலை இப்போது சமாளிக்க வேண்டியுள்ளது.
தற்போதைக்கு, நோய் பரவலின் வேகம் எங்கள் முயற்சிகளை விட அதிகமாக உள்ளது என ஜெனிவாவிலிருந்து காணொளிக் கருத்தரங்கு மூலம் Adhanom கூறினார்.
இந்த நோய் பரவலுக்குக் காரணமான புண்டிபுக்யோ இபோலா வகைக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்றும் அவர் விளக்கினார்.



