சந்தையில் கையிருப்பு மிதமிஞ்சுவதைத் தவிர்க்க, சிவப்பு மிளகாய் இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்

குவாலா லங்காட், ஜனவரி-13 – சந்தையில் கையிருப்பு மிதமிஞ்சி போவதைத் தவிர்க்க, சிவப்பு மிளகாய் உள்ளிட்ட வருவாய் பயிர்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு அவ்வாறு கூறியுள்ளார்.
அப்பயிர்களின் விலைகள் குறிப்பாக விழாக்காலத்தில் நிலையாக இருப்பதை உறுதிச் செய்யவும் அக்கட்டுப்பாடு அவசியமாவதாக அவர் சொன்னார்.
அமைச்சின் அதிகாரிகள் மட்டத்தில் இது குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து கலந்தாய்வு செய்யப்படுமென்றார் அவர்.
காய்கறிகள் விலை பிரச்னை இன்று நேற்று வந்ததல்ல; சில நேரங்களில் ஒரேடியாக விலையேற்றம் கண்டு விடும்; சில சமயங்களில் அநியாயத்துக்குக் குறைந்து விடும்.
எனவே, கையிருப்பில் கட்டுப்பாடு தேவையென, பந்திங்கில் ஏஹ்சான் தானி விவசாயத் தோட்டப் பகுதியைப் பார்வையிட்ட பிறகு மாட் சாபு பேசினார்.
அதே சமயம், ஒரே இடத்தை நம்பியிராமல், பல்வேறு நிலப்பகுதிகளில் சிவப்பு மிளகாய் பயிரீட்டை விவசாயிகள் முன்னெடுக்கவும் அமைச்சர் ஊக்குவித்தார்.
உதாரணத்திற்கு கேமரன் மலையை மட்டுமே நம்பியிருந்தால், அங்கு ஏதாவது பிரச்னை வரும் போது, நாடு முழுமைக்கான காய்கறி கையிருப்பு பாதிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.