கூச்சிங், நவ 27 – DLP எனப்படும் இரட்டை மொழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் 2025ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்பு மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வை சரவா கல்வி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு அமல்படுத்தும் திட்டத்தை கொண்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் இந்த ஆலோசனைக்கு கல்வி அமைச்சு ஆதரவு தெரிவித்துள்ளதோடு உதவுவதற்கும் முன்வந்துள்ளதாக கல்வித்துறைக்கான சரவா மாநில அமைச்சர் ரோலண்ட் சாகா வீ தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவுவதற்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கும் முன்வந்துள்ளார். எனவே மாநில கல்வித்துறை அந்த பரிந்துரையை பின்பற்றும் என்பதோடு பலர் குறிப்பாக தீபகற்ப மலேசியாவை சேர்ந்தவர்களும் அந்த பரிந்துரைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். தற்போது பள்ளிகள் நிலையில் மதிப்பீட்டு தேர்வு நடைபெற்று வருகின்றன. அது சிறப்பாக இல்லையென்று நாங்கள் கூறவில்லை. பள்ளி முறையிலான மதிப்பீட்டு முறையை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம் என ரோலண்ட் சாகா கூறினார்.