சிரம்பான், டிசம்பர் 4 – ஆயிரம் ரிங்கிட்டை மட்டும் முதலீடு செய்தால், சில மணி நேரத்தில் 30 ஆயிரம் ரிங்கிட் வரை இலாபம் ஈட்டலாம்.
இல்லாத முதலீட்டு மோசடி கும்பலால் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தை நம்பி, நெகிரி செம்பிலான், சிரம்பானில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ரிங்கிட்டை பறிகொடுத்தார்.
வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான நபரிடம் பணத்தை இழந்த அந்நபர், இம்மாதம் முதலாம் தேதி அது குறித்து போலீஸ் புகார் செய்ததை, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அரிபாய் தாராவெய் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, இரண்டாவது சம்பவத்தில், 30 ஆயிரம் ரிங்கிட் முதலீட்டு திட்டத்தை நம்பி குத்தகையாளர் ஒருவர் இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட்டை இழந்தார்.
சில மணி நேரத்தில், 90 விழுக்காடு இலாபம் வருமென எண்ணி, நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணமாற்றம் செய்த அவர் பின்னர் ஏமாற்றப்பட்டதாக, அரிபாய் சொன்னார்.