புத்ரா ஜெயா, டிச 1 – 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நகைச்சுவையோடு தெரிவித்தார். இன்று புத்ரா ஜெயா, பிரசின்ட் 8 இல் , சுராவ் புத்ரா அல்-அமீன் ஃபாஸா 4 சியில் வெள்ளிக்கிழமை தொழுகையுரையில் 12 வயது சிறுவனான அக்மல் அபிஃப் யாசர் அராபத், நிதியமைச்சருமான அன்வாரிடம் அமைச்சரவை மாற்றம் எப்போது என்று வினவினான். அதற்கு பதில் அளித்த அன்வார் ” அக்மல் உனது ஆலோசனை என்னவென்று” கேட்டார். 2024 ஆண்டுக்கு முன்னதாக என்று அக்மல் மறுமொழி தெரிவித்தான். 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அவன் ஆலோசனை தெரிவித்துள்ளான். அந்த ஆலோசனையை தாமும் ஏற்றுக்கொள்வதாக அன்வார் கூறினார்.
ஜனவரியில் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என இதற்கு முன் நவம்பர் 23 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் கேட்டபோது ஏன் டிசம்பரில் இருக்கக்கூடாது என அன்வார் அப்போது சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி உள்நாடு வர்த்தகம் மற்றம் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹூடின் அயூப் இறந்ததைத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி காலியானது முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.