கிள்ளான், மார்ச்-12 – கிள்ளானில் வீட்டருகே 2 தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 11 வயதுப் பெண் பிள்ளைக்கு 15 தையல்கள் போடப்பட்டன.
தாமான் சூரியா பெண்டாமாரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தனது சின்னமாவுடன் குப்பைக் கொட்டும் போது, அவள் நாய்க் கடிக்கு ஆளானாள்.
இருவரையும் பார்த்து நாய்கள் குரைத்ததில், பயத்தில் சின்னம்மா வீட்டை நோக்கியும், 11 வயது சிறுமி சாலை முனையை நோக்கியும் தலைத்தெறிக்க ஓடினர்.
சிறுமியை இரு நாய்களும் விடாமல் துரத்தி, ஒரு கட்டத்தில் அவள் கீழே விழுந்ததும், அவள் மீது பாய்ந்து குதறியிருக்கின்றன.
தனது அந்த மூத்தப் பிள்ளையை நாய்கள் குதறுவதை, அடுக்குமாடி வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கண்ட 29 வயது தாய், கத்திக் கூச்சலிட்டு உதவிக்குக் ஆட்களை கூப்பிட்டுக் கொண்டே பதறியடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார்.
உடனடியாக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட மகளுக்கு 6 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உடல்நிலை சீராக இருந்தாலும் நாய்கள் குதறியதில், தலை, காது, கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மோசமாக இருப்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவள் வைக்கப்பட்டுள்ளதாக தாய் கூறினார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றத்திடம் அது குறித்து புகார் செய்யப்பட்டு, அப்பகுதியில் இருந்து 3 தெரு நாய்களை அவர்கள் பிடித்துச் சென்றனர்.
“ என் மகளுக்கு நடந்ததைப் பார்க்கும் போது, பகுதி வாழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் எல்லா தெரு நாய்களையும் பிடித்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்” என தாய் மேலும் கூறினார்.
அங்கு சுற்றித் திரியும் தெரு நாய்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் MBDK ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிகிறது.