
கோலாலும்பூர், ஜூன் 26 – அண்மையில் துன் டாக்டர் மகாதீர் முகமது, மலேசியா முழுவதுமுள்ள மலாய் அரசியல் கட்சிகளை ‘பாயுங் பெசார்’ எனும் அமைப்பின் கீழ் ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதைப் போன்று, பெருவாரியான மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியான ம.இ.கா-வும் அதே போன்ற முயற்சியைக் கையாள வேண்டுமென்று மலேசிய அரசியல் ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.
79 ஆண்டுகளாக இயங்கி வரும் ம.இ.கா. மலேசிய அரசியலில் நீண்ட அனுபவமுடைய பேரியக்கம் என்றும் நான்கு இலட்சத்திற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகின்றதென்றும் குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் இந்தியர்களின் அரசியல் பலத்தை உயர்த்துவதற்கு ஒருங்கிணைப்பு கூட்டமைப்பை உருவாக்க ம.இ.கா. முன்வர வேண்டும் என்று அவர் மேலும் பரிந்துரைத்துள்ளார்.
இந்த சமூக மேம்பாட்டுக்காக நாட்டிலுள்ள பல்வேறு இந்திய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் ஒத்துழைக்க முன்வருவார்களா எனும் கேள்வியையும் முன்வைத்துள்ளார் நாடறிந்த அரசியல் ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான டத்தோ பெரியசாமி முத்தன்.