
கோலாலம்பூர், டிசம்பர்-5, தலைமறைவாகியுள்ள கோடீஸ்வரர் ஜோ லோ (Jho Low) மீது தான் வைத்த நம்பிக்கைக்கு அவர் துரோகமிழைத்திருப்பதாக, டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் கூறியுள்ளார்.
தங்களுக்கிடையிலான தொழில்முறை உறவை ஜோ லோ தவறாகப் பயன்படுத்தி 1MDB பணத்தை மோசடி செய்து விட்டதாக, அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.
நல்லவர் போல் நடித்து ஜோ லோ என்னை சாதுர்யமாக ஏமாற்றி விட்டார்.
மெருகூட்டப்பட்ட நடத்தை மற்றும் உயர்மட்ட அளவிலான தொடர்புகளை கொண்டிருந்ததால், உலகளவில் நாட்டின் அந்தஸ்தை உயர்த்துவதில் அந்த முதலீட்டாளர் ஒரு நம்பகமான பங்காளி என்று நம்பி, கடைசியில் வஞ்சத்தில் வீழ்ந்து விட்டேன் என நஜீப் சொன்னார்.
இவ்வேளையில் Langgak Duta-வில் உள்ள தனது இல்லத்திற்கு ஒரு முறை ஜோ லோ வந்திருந்ததை நஜீப் ஒப்புக் கொண்டார்.
ஆனால், அதன் போது தாங்கள் இருவரும் பேசிய விஷயங்களின் சாராம்சம் மற்றும் சூழல் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டுமென, 71 வயது நஜீப், 2.3 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 1MDB முறைகேட்டு வழக்கில் தனது தற்காப்பு வாதத்தின் போது கூறினார்.
எகிப்தில் அரபிய புரட்சி வெடித்த போது அங்கு சிக்கிக் கொண்ட மலேசியர்களை தாயகம் கொண்டு வர உதவியது, தமக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பணத்தை அரசியல் நன்கொடையாக வாரி வழங்கிய மறைந்த சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவை அறிமுகப்படுத்தியது என ஜோ லோ செய்த உதவிகள் பல.
ஆக அவரின் நோக்கம் குறித்தோ நடவடிக்கை குறித்தோ சந்தேகப்பட தனக்கு காரணமேதுமில்லை என நஜீப் கூறினார்.
அதே சமயம் ஒரு சந்திப்பின் போது ஜோ லோவுக்கு தம் கைப்பட நாசி கோரேங் சமைத்தும், சூப் வைத்தும் கொடுத்ததாகக் கூறுவதெல்லாம் அபத்தம் என்றார் அவர்.
விசாரணை மீண்டும் தொடரும்.