
கோலாலம்பூர், பிப்ரவரி-7 – SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியின் மூலம் கடந்தாண்டு அரசாங்கத்துக்கு 44.7 பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்திருக்குமென நிதியமைச்சு கணித்திருக்கிறது.
2024-ஆம் ஆண்டுக்கான ஆரம்ப இலக்கு வெறும் 41.3 பில்லியன் மட்டுமே.
இந்நிலையில் இறுதி எண்ணிக்கை கடந்தாண்டுக்கான கூட்டரசு நிதி நிலை அறிக்கையில் உறுதிப்படுத்தப்படும்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அமைச்சு அவ்வாறு கூறியது.
மற்றொரு நிலவரத்தில், 2019 முதல் 2024 வரை சீனி சார் பானங்களுக்கு கலால் வரியாக மொத்தம் 447.5 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமானங்களின் மூலம் கிடைத்த நிதி, நீரிழிவு சிகிச்சைக்கான SGLT-2 தடுப்பான்களின் விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் கடைசிக் கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான டயாலிசிஸ் உள்ளிட்ட பொது சுகாதார செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக அமைச்சு விளக்கியது.
கடந்தாண்டு அக்டோபரில் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜனவரி தொடங்கி சீனி பானங்கள் மீதான கலால் வரியை லிட்டருக்கு 40 சென் உயர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.