
சைபர்ஜெயா, ஜூன்-1 – மலேசிய இந்திய வேலையற்ற பட்டதாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முழு நிதியுதவியுடன் கூடிய சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ சான்றிதழ் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவும் Intellize Tech Sdn Bhd நிறுவனமும் இணைந்து நடத்தும் இப்பயிற்சி 8 வாரங்கள் நடைபெற்றன.
இணையப் பாதுகாப்பு சான்றிதழ்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமான EC-Council USA-வால் இது அங்கீகரிக்கப்பட்டதாகும்.
அவ்வகையில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த குழு 1, தொகுதி 2-டைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு, மே 30-ஆம் தேதி சைபர்ஜெயா, India Gate உணவகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மித்ரா தலைவர் பி.பிரபாகரன், மித்ரா தலைமை இயக்குநர் ஜி.பிரபாகரன், நிகழ்ச்சி ஆலோசகரும் Intellize Tech Service தலைமை வியூக அதிகாரியுமான Dr கவிதா மூர்த்தி, Intellize தலைவர் Dr A. ஹுஸ்னி ஜொஹாரி, அதன் தலைமை செயலதிகாரி ஜஸ்டின் பிரான்சிஸ் உள்ளிட்டோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
பயிற்சியை முடிந்த 25 பங்கேற்பாளர்களுக்கு பிரபாகரன் சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.
தகுதி இருந்தும் வேலைக் கிடைக்காத மலேசிய IT பட்டதாரிகளுக்கு திறன் தேர்ச்சி பயிற்சி அவசியமாகும்; அவ்வகையில் மித்ரா வழங்கும் இந்த இலவச பயிற்சியை, இதுவே அனைத்துலக நிறுவனங்களில் மேற்கொண்டால் 15,000 ரிங்கிட் வரையில் செலவாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
பயிற்சியை முடித்தவர்களில் 40 விழுக்காட்டினருக்கு வேலையும் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி தகவலையும் அவர் பகிர்ந்தர்.
200 இடங்களுக்கு 500 பேர் விண்ணப்பித்து பெரும் வரவேற்பு வழங்கியிருப்பதால் மலேசிய இளம் திறமைசாலிகளுக்கு இவ்வாண்டு இது போன்ற மேலும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமென, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினர்.
இவ்வேளையில் பயிற்சியின் சிறப்புகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் Dr கவிதா மூர்த்தி பேசினார்.
இப்பயிற்சித் திட்டம் குறித்த அனுபவங்களையும் தங்களுக்கு எந்த வகையில் அது பயனாக இருந்தது என்பது குறித்தும் மாணவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.