
கோலாலம்பூர், ஏப்ரல்-28-கோலாலம்பூர், TRX-ல் உள்ள ‘The Exchange 106’ கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹுவாவே AI ஆய்வகம் மற்றும் புத்தாக்க மையத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மலேசியாவில் ஹுவாவே நிறுவனத்தின் 25-ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்தப் புதிய மையம் திறக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் டிஜிட்டல் மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான புதிய தீர்வுகளை இந்த மையம் வழங்கும்.
13,638 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இம்மையம், முழு ஆசிய பசிஃபிக் வட்டாரத்திற்கும் ஒரு முக்கியத் தளமாகச் செயல்படும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அன்வார், ஹுவாவே நிறுவனம் மலேசியாவின் மீது கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த மையம் வெறும் தொழில்நுட்ப மையம் மட்டுமல்ல, இது மலேசியாவின் இளம் மாணவர்களுக்கும் நிபுணர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீரிழிவு நோய் அபாயத்தைக் கண்டறியும் உலகின் முதல் ‘Watch FIT 5 Series’ கடிகாரத்தையும் ஹுவாவே இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தியது.
இது வரும் மே மாதம் மலேசியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தத் தொடக்க விழாவில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



