
கோலாலாம்பூர், ஜூன்-30 – சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு UPU வழியாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் 15,000 ரிங்கிட் கட்டணத்தில் MBBS பட்டப்படிப்புக்கு இடம் கொடுக்காமல், SATU முறையின் கீழ் 500,000 ரிங்கிட் கட்டணத்தில் இடம் வழங்குவதா?
மலேசிய சீனர் சங்கமான மசீசவின் தலைவர் டத்தோ ஸ்ரீ வீ கா சியோங், அவ்வாறு காட்டமாகக் கேட்டுள்ளார்.
SATU முறை குறித்து முன்னதாக தாம் கேள்வி எழுப்பியது குறித்து மலாயாப் பல்கலைக் கழக துணை வேந்தர் பதிலறிக்கை விட்டிருந்தது தொடர்பில், கா சியோங் வீடியோ ஒன்றில் அவ்வாறு கேட்டார்.
STPM தேர்வில் முழு மதிப்பெண்களான 4.0 PNKK புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் UPU வழியாக MBBS மருத்துவப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்து, அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திடீரென லட்சக்கணக்கில் பணம் கட்டி, SATU முறையின் கீழ் அதே MBSS இடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது; இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன, பல்கலைக் கழகம் இதனை மறுக்க முடியுமா என வீ கா சியோக் கேட்டார்.
“நான் கொடுத்த தரவுகள் முழுமையானவை அல்ல சொல்லும் துணை வேந்தர், முழுமையான தரவுகளை வெளியிடட்டுமே” என கா சியோங் கூறினார்.
மலாய்ப் பல்கலைக் கழக ஆண்டறிக்கையின் அடிப்படையில் தான் புள்ளிவிவரங்களைக் கூறியதாகத் தெரிவித்த வீ கா சியோங், நாடாளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சு கொடுத்த பதிலையும் சுட்டிக் காட்டினார்.
UPU-வோ SATU-வோ எதுவாக இருந்தாலும் merit எனப்படும் தகுதி அடிப்படையில் தான் அவை மேற்கொள்ளப்படுவதாக துணை வேந்தர் சொல்கிறார்.
“ஆக, என்னுடையக் கேள்வியும் மக்களுடையக் கேள்வியும் என்னவென்றால், UPU-வும் SATU-வும் மெரிட் அடிப்படையில் தான் என்றால், ஒரே பல்கலைக் கழகத்திற்கு எதற்கு இரு வேறு ஆள்சேர்ப்பு முறைகள் என வீ கா சியோங் கேட்டார்.
இந்த SATU முறையில் கடந்தாண்டு 300,000 ரிங்கிட் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது; இவ்வாண்டு 500,000 ரிங்கிட்டை அது எட்டியுள்ளது.
கட்டணத்தில் ஏனிந்த கணிசமான உயர்வு என்பதை UM விளக்குமா?
ஆக, UPU வழியாக இடம் கிடைக்காத மாணவர்கள் SATU முறையின் கீழ் பணம் கட்டி பட்டப்படிப்புக்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பது உண்மையா இல்லையா என்பதை மக்களுக்கு விளக்குமாறு UM நிர்வாகத்துக்கு வீ கா சியோங் சவால் விடுத்தார்.