
கோலாலம்பூர், செப்-18-சமூக ஊடகப் பதிவு தொடர்பில் சர்ச்சைக்குரிய மத போதகர் Zamri Vinotht மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வருகின்றது. அவர் மீதான குற்றச்சாட்டை மறுஆய்வு செய்யக் கோரி சமர்ப்பித்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு அறிவிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற வழக்கு நிர்வாக விசாரணையின் போது, Zamri சமர்ப்பித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் Nur Farhana Poad தெரிவித்தார். எனினும், அவை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் கூறப்படவில்லை.
அவ்வழக்கில் அரசுத் தரப்பு சார்பில் ஏழு சாட்சிகள் வரை விசாரிக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து வழக்கு அடுத்தாண்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் விசாரிக்கப்படும் என அறிவித்த நீதிமன்றம், Zamriயின் பிணையையும் நீட்டித்தது.
இவ்வேளையில், அம்முடிவை நேர்மறையாகப் பார்ப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய Zamri தெரிவித்தார். தமது தரப்பு வாதத்தையும், தாம் ஒருங்கிணைத்து வரும் ‘சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான இயக்கம்’ (Garah) குறித்தும் விளக்குவதற்கு அது வாய்ப்பளிக்கும் என அவர் கூறினார்.
பிப்ரவரி 3ஆம் தேதி ‘சட்டவிரோதக் கோயில்கள்’ தொடர்பான ஒன்றுகூடல் குறித்து முகநூலில் பதிவு வெளியிட்டதாகக் கூறி, மார்ச் 17ஆம் தேதி Zamri மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியது குறிப்பிடத்தக்கது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.



