
ஷா ஆலம், செப்டம்பர் 18 – சிலாங்கூர், ஷா ஆலம், கம்போங் பாரு சுபாங், செக்சன் U6 (Kampung Baru Subang, Seksyen U6) பகுதியில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
நேற்றிரவு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் வீரர்கள், சுங்கை பூலோ மற்றும் ஷா ஆலம் நிலையங்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மொத்தம் 18 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, மூன்று மாடிகளைக் கொண்ட ‘கிளாஸ் ஏ’ தொழிற்சாலைக் கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இந்தத் தீ விபத்தில் கட்டிடத்தின் சுமார் 80 விழுக்காடு பகுதி சேதமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை எந்தவித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 மணி நேரங்களில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், மூன்றாவது மாடியில் எஞ்சியிருந்த தீயை அணைத்து, நிலைமையை உறுதி செய்யும் இறுதிக்கட்ட தீத்தணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.



