Latest

ஃபாட்லீனா: 10A+, மற்றும் A பெற்ற SPM மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிகுலேஷன் நேரடி வாய்ப்பு

செலாயாங், ஜூன்-24,

SPM தேர்வில் 10A+ மற்றும் A நிலையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயில நேரடி வாய்ப்புக் கிடைக்கும்.

கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

என்றாலும், A- தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களும் மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்; அதற்கு எந்தத் தடையுமில்லை.

அவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.

A- தேர்ச்சி A தேர்ச்சியாக கருதப்படாது என்றோ, அது மிகச் சிறந்த தேர்ச்சி அல்ல என்றோ எந்த இடத்திலும் கல்வி அமைச்சு கூறவில்லை என்றும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

அதே சமயம் A- பெற்றிருந்தால் மெட்ரிகுலேஷன் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் நாங்கள் கூறவில்லை என்றார் அவர்.

அவர்களின் விண்ணப்பங்களும் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுமென அவர் உத்தரவாதம் அளித்தார்.

பரீட்சை முடிவுகளைத் தவிர்த்து, விளையாட்டு, புறப்பாட நடவடிக்கைகளின் மதிப்பீடும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும்.

தகுதி, நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமை, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதே அமைச்சின் நோக்கம்

மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 86 விழுக்காட்டினர் 9 பாடங்களை எடுத்துள்ளனர்; 14 விழுக்காட்டினர் மட்டுமே 10 பாடங்களை எடுத்தனர்.

எனவே, 9 பாடங்களை எடுத்த 86 விழுக்காட்டினருக்கும் நாம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமென ஃபாட்லீனா சொன்னார்.

மெட்ரிகுலேஷன் படிப்புக்கான இவ்வாண்டு மாணவர் சேர்க்கையில் A- தேர்ச்சி புறக்கணிக்கப்பட்டதாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ள நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SPM தேர்வில் 10 A-க்களுக்கும் மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் படிப்பில் இடம் கிடைக்குமென முன்னதாக பிரதமர் உத்தரவாதமளித்திருந்தார்.

ஆனால், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியான புதிய சுற்றறிக்கையில், 10 பாடங்களிலும் A+ அல்லது A தேர்ச்சியைப் பெற்றிருந்தால் மட்டுமே மெட்ரிகுலேஷனுக்கு நேரடி வாய்ப்பைப் பெறுவர் என அறிவிக்கப்பட்டது.

இதனால், A- தேர்ச்சிப் பெற்றவர்களின் நிலை என்னாவது என சமூகத்தில் பெரும் கவலை எழுந்தது.

கல்வி அமைச்சு அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!