
கோலாலம்பூர், மார்ச்- 3 -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாகி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது முன்கூட்டியே எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
அசாம் பாகியின் பங்குகள் குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை இந்த வாரம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்னதாகவே அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது பொருத்தமாக இருக்காது என அன்வார் சுட்டிக்காட்டினார்.
சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் தலைமையிலான விசாரணை இந்த வாரம் சில நாட்களுக்குள் முடிவடையும்.
இந்த நிலையில் அரச விசாரணை ஆணையம் மீதான ஒரு ஆலோசனையை தாம் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை .
சட்டத்துறை தலைவர் தலைமையிலான விசாரணை அறிக்கை இரண்டொரு நாட்களில் தயாராகிவிடும் என்று தனக்கு தெரியும் என்பதால் அதன் பிறகு விசாரணையை நீட்டிக்க வேண்டிய அடிப்படை இருந்தால் அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.



