
2018ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒருதலைப்பட்டசமான மதமாற்றம் செல்லுபடியாகது என்பதோடு அக்குழந்தையின் பராமரிப்பு உரிமையை அதன் தாயாரான திருமதி இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்திரா காந்திக்கு இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றமாகும் என கூறியுள்ளார் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் .
தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த தனது குழந்தையை மதம் மாறிய தனது முன்னாள் கணவர் 2009ஆம் ஆண்டு கடத்திச் சென்றதால் அக்குழந்தையை இந்திரா காந்தியிடம் திரும்ப ஒப்படைப்பதில் உள்துறை அமைச்சு இன்னும் அலட்சியமாக நடந்து கொள்வதாக மேலவையில் ஆற்றிய உரையில் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
ஒரு தாய்க்கான நியாயமான உரிமை மலேசியாவில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
நமது நாட்டின் சட்டம் மதிக்கப்படவேண்டும் என்பதோடு இந்திரா காந்தியின் குழந்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு உள்துறை அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே கடத்தப்பட்ட தனது மகள் பிரசனா தீக்ஷாவுடன் (Prasanna Diksha ) மீண்டும் இணைவதற்கான இந்திரா காந்தியின் இடைவிடாத தேடல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து INGAT எனப்படும் இந்திரா காந்தி நடவடிக்கை குழுவின் தலைவரான அருண் துரைசாமியும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான அநீதியினால் இந்திரா காந்தி பல ஆண்டு காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்.
அவருக்கு நியாயம் கிடைப்பதற்கு விவேகமாகவும் நேர்மையாகவும் அதிகாரிகள் பங்காற்ற வேண்டும் என அருண் துரைசாமி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.