
ஈப்போ, மார்ச்-16-பேராக், ஈப்போவில் 58 வயது ஆடவர், தனது வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் தான் கண்டெடுத்த ஓர் இளைஞரின் சடலம் உண்மையில் அண்டை வீட்டுக்காரரின் மகன் என தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
இச்சம்பவம் தாமான் மெங்க்லெம்பு இம்பியானா அட்ரில் பகுதியில் நிகழ்ந்தது.
அவர் தனது காரை நிழலில் நிறுத்த முயன்றபோது, காருக்கு ஏதோ தடையாக இருந்ததால் கீழே இறங்கி பார்த்தார்.
அப்போது கால்வாயில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட, பின்னர் அந்த உடல் வெறும் 30 மீட்டர் தொலைவில் வசிக்கும் அண்டை வீட்டாரின் மகன் என தெரியவந்தது.
அவ்விளைஞர் ஒரு கல்லூரி மாணவர் என்றும் கூறப்படுகிறது.
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று சவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மற்றபடி குற்ற அம்சங்கள் எதுவும் இல்லாததால், இச்சம்பவத்தை திடீர் மரணமாக போலீஸார் வகைப்படுத்தி விசாரிக்கின்றனர்.



