
தெஹ்ரான் , ஜூன் 16 – ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 224 பேர் உயிரிழந்ததாக ஈரான் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் 1,277 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர் சமூக ஊடகங்களில் தெரிவித்தார், உயிரிழந்தவர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்று அவர் கூறினார்.
இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இஸ்ரேலால் தாக்கப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியது. ஏற்கனவே அனைத்துலக தடைகளின் கீழ் உள்ள ஈரானின் எரிபொருள் துறையின் மீது பரந்த அளவிலான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கவலையை இது எழுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது அலை வான்வழித் தாக்குதல்களில், அதிக மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை குறிவைத்து, ஈரானிய வான்வெளியை கிட்டத்தட்ட முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
உடனடியாக ஆயுத தொழிற்சாலைகளை காலி செய்யுமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரித்திருப்பதால் , இதனால் ராணுவ நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்பதற்கான அறிகுறி என கூறப்படுகிறது. நேற்று நண்பகலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல புதிய வெடிச்சத்தங்கள் கேட்டன. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலுக்கு தனது முழு ஆதரவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதோடு ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே அந்நாடு பெரிய அழிவைத் தவிர்க்க முடியும் என்று எச்சரித்துள்ளார்.