
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கு அதிக வரி; ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், பிப்ரவரி-24,
“உலக நாடுகளுக்கான பரஸ்பர வரி தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலும் எந்த நாட்டையும், அதிகப்படியான இறக்குமதி வரிகள் மூலம் தண்டிப்பேன்” என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அத்தீர்ப்பு, அமெரிக்கக் காங்கிரஸ் சபையின் அனுமதி இல்லாமல் வரி விதிக்கும் அதிபரின் அதிகாரத்தை கட்டுப்படுத்திய நிலையில், அதனை “அவமானகரமானது” என ட்ரம்ப் சாடி வருகிறார்.
ஆனால், தேசிய பாதுகாப்பு அடிப்படையில் வரிகளைத் தொடர தமக்கு மாற்று திட்டங்கள் உள்ளன என்றும் வலியுறுத்தினார்.
அவ்வகையில், “பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றிய நாடுகள், இப்போது இன்னும் மோசமான வரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என Truth Social சமூக ஊடகப் பக்கத்தில் அவர் காடமாகக் கூறினார்.
அதே சமயம், நீதிமன்றத்தின் தீர்ப்பே தனக்கு மேலும் அதிகாரத்தை கொடுத்துவிட்டதாகவும், எனவே வரிகளை விதிக்க காங்கிரஸுக்குத் திரும்ப தேவையில்லை என்றும் அவர் கூறிக் கொண்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ட்ரம்ப் இப்படி தடாலடியாக செயல்படுவது, அனைத்துலக வாணிபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.



