
ஜோர்ஜ்டவுன், ஜூலை-31, கடந்த வாரம் ஓர் உணவகத்தில் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டு நாசவேலையில் ஈடுபட்டதாக, ஒரு காப்பி கடை பணியாளர் மற்றும் ஒரு தொம்யாம் (tomyam) கடை உதவியாளர் மீது பினாங்கு ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
Jing Zhang Restaurant & Bar உணவக வளாகத்தில் வெடிபொருட்களை, அதாவது பட்டாசுகளை கொளுத்தி வீசி, அதன் மூலம் RM34,800 சேதம் மற்றும் இழப்புகளை ஏற்படுத்தியதாக இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.
ஜூலை 23-ஆம் தேதி காலை 5.19 மணிக்கு Jalan Pahang-ங்கில் அக்குற்றம் புரியப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், 32 வயது Khoo Teng Chi, 37 வயது Joanne Lim இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினர்.
இதையடுத்து தலா 8,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.செப்டம்பர் 2-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.