
கோலாலம்பூர், ஜூன் 6 – செவ்வாய்க்கிழமை Pusat Bandar Puchong எல்.ஆர்.டி நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்து ரயிலில் அடிபட்டு இறந்த தைவான் நபரின் மரணத்தில் எந்த குற்றவியல் அம்சமும் இல்லையென சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஒமார் கான்
( Hussein Omar Khan ) தெரிவித்திருக்கிறார். அந்த சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவொரு குற்றச் செயலுக்கான அறிகுறியும் இல்லையென்பதால் தொடக்கத்திலிருந்தே, இது திடீர் மரணமாக கருதப்படுகிறது என்று உசேய்ன் கூறினார்.
சம்பந்தப்பட்ட தைவானிய ஆடவர் கீழே விழுந்துள்ளார் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். 60 வயதுடைய அவரது உடல் சவ பரிசோதனைக்காக சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் தடயயியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தித்திவங்சா எல்.ஆர்.டி நிலையத்தில் பார்வையற்ற முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்ததில் ரயிலினால் மோதப்பட்டு இறந்தார். இதனைத் தொடர்ந்து குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, எல்ஆர்டி நிலையங்களில் Platform சென்சார்களை பொருத்தவிருப்பதாக Prasarana Malaysia Berhad மலேசியா பெர்ஹாட் தெரிவித்திருந்தது.