
காராக், மே 22 – காராக் நெடுஞ்சாலையின் கோலாலம்பூர், நோக்கி செல்லும் பகுதியில், கம்போங் சுங்கை சிஞ்சின் (Kampung Sungai Chinchin) அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தெரிவித்ததாவது, அதிகாலை 2.07 மணியளவில் Volkswagen கார் ஒன்று சிமெண்ட் லோரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
செலாயாங் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு 2.35 மணிக்கு வந்தடைந்த போது காரில் இருந்த நால்வரும் உள்ளே சிக்கியிருந்தனர். 27 வயதான பெண்ணுக்கு தலையில் கடுமையான காயமும் இடது காலில் முறிவும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் காரிலிருந்து மீட்டு மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.



