குஜராத், செப்டம்பர் 30 – அண்மையில் இந்தியாவில் வித்தியாசமாக, மகாத்மா காந்திக்குப் பதிலாகப் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் (Anupam Kher) புகைப்படம் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில், இரண்டு நபர்களால் ஏமாற்றப்பட்டதாக வியாபாரி ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அந்த கள்ளநோட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை மொத்தக் கள்ளநோட்டுகளையும் கைப்பற்றியுள்ளது.
அப்போது, அந்தப் பண நோட்டுகளில் ‘Reserve Bank of India’ என்பதற்கு பதிலாக ‘Resolve Bank of India’ என்றும் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில், கள்ளநோட்டு அச்சிடப்பட்ட இடமான குஜராத்தின் ஆன்லைன் ஆடை விற்பனை நிலையத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகள் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆடை விற்பனையகம் நடத்துவதைப் போல கள்ளநோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஹிந்தி வெப் சீரீஸ் ‘Farzi’ மூலம் ஈர்க்கப்பட்டு கள்ளநோட்டுகள் அச்சடித்ததாகக் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியைத் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அனுபம் கெர் ”ஐந்நூறு ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்குப் பதிலாக என்னுடைய புகைப்படமா? என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், வலைத்தளவாசிகள் பல நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.