
கெரிக், ஜூன்-9 – பேராக் கெரிக் அருகே JTB எனப்படும் கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில், UPSI பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் பலியாயினர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று விடியற்காலை 1 மணிக்கு திரங்கானு, ஜெர்த்தேவிலிருந்து தஞ்சோங் மாலிமில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் வழியில் UPSI பேருந்து, Perodua Alza MPV-யுடன் மோதியது.
இதில் பேருந்து குடை சாய்ந்ததில் மொத்தமாக 48 பேர் பாதிக்கப்பட்டனர்.
13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, மேலும் இருவர் மருத்துவமனையில் மரணமடைந்தனர்.
கைமுறிவு, கால்முறிவு என பலர் காயங்களுடன் கெரிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தற்போதைக்கு 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது; 20 மாணவர்கள் பாதி கவலைக்கிடமாக மஞ்சள் மண்டல வார்டில் உள்ளனர்; 6 பேர் பச்சை மண்ட வார்டில் சீராக இருக்கின்றனர்.
இவ்வேளையில் இச்சம்பவம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவர்களுக்கு உரிய உதவிகளை உடனடியாக வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டார்.