
ஷா ஆலாம், பிப்ரவரி -25 – ஷா ஆலாம் தாமான் சன்டெக்ஸ் அருகே ஏற்பட்ட சிறிய சாலை விபத்துக்குப் பிறகு 70 வயதான ஒருவரை தாக்கி, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டிய 52 வயது வியாபாரிக்கு உயர்நீதிமன்றம் நான்கு மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
முன்பு காஜாங் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் விதித்த 5,500 ரிங்கிட் அபராதத்தை ரத்து செய்து, சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.நீதிபதி, குற்றவாளியின் செயல் முறையற்றதுடன் தீவிர விளைவுகளை ஏற்படுத்தியதாகக் கூறி, தண்டனையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டார்.
பிப்ரவரி 8 ஆம் தேதியன்று ஜாலான் செராஸ்–ஹுலு லங்காட் சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில், சிறிய வாகன விபத்திற்கு பின்னர் அந்த ஆடவன், 70 வயதான முதியவரைத் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் அவரின் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது நாக்கில் ஆறு தையல்கள் போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்முதியவர், வெளியே செல்லவும் வாகனம் ஓட்டவும் பயப்படுவதாக தெரிவித்தார். மறுபுறம், தனது மூன்று வயது குழந்தை மனைவியின் கைகளிலிருந்து தவறி விழுந்ததால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவ்வாறு நடந்துகொண்டதாக குற்றவாளி விளக்கம் அளித்தார்.



