
கோலாலாம்பூர், மார்ச்-10-தன்னைத் தானே நில மீட்பு ஆர்வலராகக் கூறிக் கொள்ளும் தமிம் தாஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak), இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலத்தை காலால் மிதித்து அவமதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் நாடு முழுவதும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் போலீஸார் விரைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய்லி, அல் குர்ஆனை அவமதித்த மாணவர் மீது எடுக்கப்பட்ட வேகமான நடவடிக்கையைப் போலவே, இந்த சம்பவத்திலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ, இந்து சமூகத்தில் பெரும் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களில் ஏராளமான போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு கூட, சுமார் 200 இந்துக்கள் செந்தூல் போலீஸ் தலைமையகத்தின் முன்பு அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியதை ராயர் சுட்டிக் காட்டினார்.
அதிகாரிகள் தாமதிக்கவோ, இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளவோ கூடாது; இல்லையெனில் அது பாரபட்ச வழக்கு விசாரணையாகக் கருதப்படும் என்றும், இது மக்களிடையே மேலும் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.



