
புது டெல்லி – மே-22 – இந்தியத் தலைநகர் புது டெல்லியிலிருந்து ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீ நகர் பயணமான இன்டிகோ விமானம் நேற்று வலுவான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது.
இதனால் விமானம் நடுவானில் கடுமையாகக் குலுங்கியதில், அதிலிருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
அப்போது பதிவான வீடியோக்கள் வைரலாகியுள்ளன. மின்னல் மின்னுவதும் அந்த வீடியோக்களில் தெரிகிறது. எதிர்பாராத வகையில் ஆலங்கட்டி மழையும் சேர்ந்துகொண்டதால், விமானத்தின் மூக்குப் பகுதியும் சிறிய சேதமடைந்தது.
எனினும் நிலைமையைச் சமாளித்த விமானி, ஸ்ரீ நகர் விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு அவசரத் தகவல் கொடுத்தார். பின்னர் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய இன்டிகோ விமான நிறுவனம், பயணிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு, அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட்டதாகக் கூறியது. எனினும் சேத விவரங்கள் குறித்து அது எதுவும் தெரிவிக்கவில்லை.