
கோலாலாம்பூர், ஜூன்-14 – இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், நாட்டில் 38,000-க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ள வேளையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ மனித வள அமைச்சான KESUMA தீவிர புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை தரவுகளின்படி, வேலை இழந்தவர்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 25 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் ஆவர்.
நிறுவனங்களின் மறுசீரமைப்பு காரணமாக உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற முக்கியப் பொருளாதாரத் துறைகளில் இந்த வேலை இழப்புகள் பதிவாகியுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இச்சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் வேலையின்மை விகிதம் 3 விழுக்காடாகக் குறைந்து தொழிலாளர் சந்தை மீள்திறனுடன் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பாதிக்கப்பட்டோரை மீட்க 3 முக்கிய முன்னுரிமைகளை அமைச்சு செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
குறிப்பாக, MYFutureJobs தளம் வழியாகப் பொருத்தமான வேலைகளை வழங்குதல், PERKESO மூலம் புதிய திறன் பயிற்சிகளை அளித்தல் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய துறைகளைக் கண்டறிந்து விரைவான தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.
தொழிலாளர்கள் தங்களின் அடுத்தகட்ட தொழில் பாதையைத் திட்டமிட தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆதரவை வழங்க மனித வள அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக ரமணன் மேலும் தெரிவித்தார்.



