
கோலாலம்பூர், ஏப்ரல்-29-நாட்டின் மின்சார விநியோகம் சீராக உள்ளதாக, பொருளாதார அமைச்சர் அக்மால் நாசீர் கூறியுள்ளார்.
என்றாலும், அனைத்துலகச் சந்தையில் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விலை உயர்வு, மின் உற்பத்தி செலவை அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ICPT எனப்படும் செலவு சரிசெய்தல் முறை மூலம் பொது மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என அவர் உத்தரவாதம் அளித்தார்.
உற்பத்திச் செலவுகளைப் புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டியது அவசியம் என அக்மால் சொன்னார்.
நீண்ட காலத் தீர்வாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்கு நாடு விரைவாக மாற வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எது எப்படி இருப்பினும், குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீதான பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
சுமார் 7.5 மில்லியன் உள்நாட்டுப் பயனர்கள், அதாவது 600 கிலோ வாட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் 85 விழுக்காட்டு குடும்பங்கள், தானியங்கி எரிபொருள் சரிசெய்தல் கட்டணத்தில் (Automatic Fuel Adjustment charge) இருந்து தொடர்ந்து விலக்கு பெறுவார்கள் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.



