
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று சிலாங்கூர், டெங்கிலில் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு அவர் சுருக்கமாக பதில் கூறினார்.
அந்த தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையில் 5,000-க்கும் மேற்பட்டவர்களைக் குறைக்கவும், 2026 டிசம்பர் வரை புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது குறித்து கருத்துரைக்குமாறு பிரதமரிடம் கேட்கப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோனாஸ் மேற்கொள்ளும் மறுசீரமைப்பே இந்த ஆட்குறைப்புத் திட்டமாகும்.
பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 75 முதல் 80 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தங்களது பட்ஜெட்டை நிர்ணயிப்பதாக பெட்ரோனாஸ் தலைவரும் குழும தலைமை நிர்வாக அதிகாரியுமான தெங்கு முஹமட் தௌஃபிக் அசிஸ் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2023-ரில் 21 விழுக்காடு சரிவைச் சந்தித்த பெட்ரோனாஸஸின் நிகர வருமானம், கடந்தாண்டு 32 விழுக்காடு சரிந்தது.