
கோலாலம்பூர், ஜூன்-29 – சிலாங்கூர் பத்து மலை திருத்தலத்தில் நேற்று ‘இசை கதம்பம்’ எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
80-க்கும் மேற்பட்ட கலைக் கல்வி மாணவர்கள் அதில் பங்கேற்று தங்களின் திறமைகளை நிரூபித்தனர்.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப் புரிந்து மாணவர்களைப் பாராட்டினார்.
கோலாலம்பூர் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா சிந்தனையில் அமையப்பெற்ற பத்து மலை கலாச்சார மையத்தில், இந்து சமய வகுப்புகள், தேவார வகுப்புகள், இந்திய பாரம்பரிய இசைக் கருவிகளை வாசிப்பதைக் கற்றும் கொடுக்கும் வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுவதையும், சிவகுமார் தமதுரையில் சுட்டிக் காட்டினார்.
தேவஸ்தானத்தின் முழு ஒத்துழைப்போடு, ஸ்ரீ ஐஸ்வர்யா நுண்கலை, DSK குழுமம் மற்றும் மஹிமா ஆதரவில் இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன.
நமது பாரம்பரிய அம்சங்களைக் கற்றுத் தேர்ந்து, அவற்றைக் கட்டிக் காப்பதன் மூலம் சமூகத்திற்கும் மேலும் பங்காற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதை, இந்த இலவச வகுப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், மலேசியாவில் இந்து சமயமும் இந்து ஆலயங்களும் எதிர்நோக்கும் சவால்களுக்கான முழுமையான தீர்வுகளை உள்ளடக்கிய blueprint பெருந்திட்டத்தை, மஹிமா உருவாக்கி வருகிறது.
மஹிமா துணைத் தலைவர் டத்தோ செல்வம் மூக்கையா மற்றும் ஒரு வழக்கறிஞர் மேற்பார்வையில் இத்திட்டம் விரைவுப்படுத்தப்படும் என சிவகுமார் தெரிவித்தார்.
இந்து சமூகம் எதிர்கொள்ளும் நல்வேறு பிரச்னைகளைக் கையாள இந்த பெருந்திட்டம் அவசியமாகும்.
சட்ட சிக்கல்களைக் கையாளும் வகையில், மஹிமாவில் சட்டப் பிரிவவொன்றும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு வழக்கறிஞர் ஸ்ரீ தரன் தலைமையேற்பார் என சிவகுமார் தெரிவித்தார்.