
ஜோகூர் பாரு, ஜூன் – 25,
நாட்டின் அருங்காட்சியகத் துறையை வலுப்படுத்தவும், நவீனமயமாக்கவும் 3 முக்கிய யுக்திகளைத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜோகூர் பாருவில் நடைபெற்ற ‘தேசிய அளவிலான அனைத்துலக அருங்காட்சியக தின விழா 2026’ தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் இதனை வெளியிட்டார்.
அந்த 3 முக்கிய வியூகங்களில், முதலாவதாக அருங்காட்சியக மேம்பாட்டுக்கான ‘இணைப்பு மானியம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக, இத்துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்த ‘மலேசிய அருங்காட்சியக சட்ட மசோதா இயற்றப்படும்.
மூன்றாவதாக, கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்த ‘மலேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்’ (Muzium Alam Semula Jadi Malaysia) புத்ராஜெயாவில் அமைக்கப்பட, மடானி அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார் அவர்.
நாட்டின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த புதிய அருங்காட்சியகத்தில், 76,000-க்கும் மேற்பட்ட விலங்கியல், தாவரவியல் மற்றும் புவியியல் சார்ந்த அரிய மாதிரி சேகரிப்புகள் பொது மக்களின் பார்வைக்காகவும், கல்வி ஆராய்ச்சி தேவைகளுக்காகவும் வைக்கப்படவுள்ளன.
மலேசியாவில் அனைத்துலக அருங்காட்சியக தினக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டுக்கான விழா “துண்டாடப்பட்ட உலகை ஒன்றிணைக்கும் அருங்காட்சியகங்கள்” என்ற கருப்பொருளுடன் ஜோகூரில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



