இதுவே எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம் – கிறிஸ்டியானோ ரொனால்டோ

மாட்ரிட், ஆகஸ்ட்-17-ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இவ்வாண்டு ஒருவேளை தனது கடைசி ஆண்டாக இருக்கலாம் என கிறிஸ்டியானோ ரொனால்டோ கோடி காட்டியிருக்கிறார்.
இதுவே எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும். ஒரு சிறப்பான சாதனையை விட்டுச் செல்ல விரும்புவதாக அவர் ‘வோக்’ (Vogue) இதழுடனான நேர்காணலில் தெரிவித்தார்.
தமது எதிர்காலத் திட்டங்கள் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த 41 வயது ஜாம்பவான், பல விஷயங்கள் இருப்பதால், ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம் என்றும் கால்பந்து விளையாட்டை விட்டு விலகும் போது ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படலாம் என்றும் கூறினார். அதை நிரப்ப ஒரே ஒரு வழியை மட்டும் நம்பியிருக்காமல், பல்வேறு வழிகளில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மகிழ்ச்சியாக இருப்பது, பயணம் செய்வது, மிகவும் பிடித்த padel விளையாட்டை விளையாடுவது, சம்பாதித்தவற்றைத் தொடர்ந்து அனுபவிப்பது போன்றவை தமது திட்டங்கள் என்றாரவர். ரொனால்டோ கடந்த 25 ஆண்டுகளாகக் கால்பந்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
ஐந்து முறை Ballon d’Or மற்றும் ஐந்து முறை ‘சாம்பியன்ஸ் லீக்’ பட்டங்களைக் கைப்பற்றியுள்ள ரொனால்டோ, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு அனைத்துலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த ஆண் விளையாட்டாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் சாம்பியனான Al-Nassr அணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அந்த அணியுடனான அவரது நடப்பு ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டு காலம் எஞ்சியுள்ளது.
தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 1,000 கோல்களை எட்ட ரொனால்டோவுக்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே தேவை. கடந்த மாதம் முடிவடைந்த 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவர் போர்ச்சுகல் அணியை இறுதி 16 அணிகள் சுற்று வரை கொண்டு சென்றார். அவர் ஒட்டுமொத்தத்தில் அதில் மூன்று கோல்களைப் புகுத்தினார். அதே சமயம் ஐந்து வெவ்வேறு உலகக் கிண்ணப் போட்டிகளில் கோலடித்த முதல் வீரராகவும் ரொனால்டோ திகழ்கிறார்.
ரொனால்டோ அண்மையில் தனது நீண்ட காலக் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் புரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



