
பந்திங், ஜூலை 7 – பந்திங்கிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், 15 வயதான பெண் சந்தேகநபருக்கு 4 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேல் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், போலீசார் இந்த வழக்கை கொலை முயற்சி தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபரின் வழக்கறிஞர், அவர் ஆட்டிசம் கொண்ட மாற்றுத்திறனாளி (OKU) எனும் தகவலை பகிர்ந்துள்ளார்.
நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 15 வயதுடைய மாணவி ஒருவர் முதுகு, தோள் மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பல முறை கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகநபர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வராமல் இருந்து, உடல்நல சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வதந்திகள் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பள்ளியின் நிலைமை தற்போது பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



