
கோலாலம்பூர், மே-25 – பி.கே.ஆர் கட்சி வரலாற்றில் டத்தோ சேவியர் ஜெயக்குமாருக்குப் பிறகு, உதவித் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற இந்தியத் தலைவராக அதுவும் இரண்டாவது அதிக வாக்குகளுடன் சாதனைப் படைத்துள்ளார் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்.
இது பேராளர்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் புலப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ரமணன், இந்த மகத்தான ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது வெறும் தனிமனித வெற்றியல்ல; பல்லின மக்களையும் பிரதிநிதிக்க வேண்டி பேராளர்கள் ஒருமித்த கருத்தோடு செய்துள்ள விவேகமானத் தேர்வாகும்.
எனவே நீதி – நேர்மை கொள்கைகளை முன்னிறுத்தி மக்களின் குரலாக விளங்குவேன் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் உறுதியளித்தார்.
தேர்தலுக்குப் பிறகு இது கட்சியை வலுப்படுத்தும் நேரம்.
கெஆடிலானின் அடிப்படைக் கொள்கையான சீர்திருத்த உணர்வு ஒரு போதும் மங்காது.
மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப நாட்டு மக்களின் அபிலாஷைகளை ஏந்திச் செல்வது மற்றும் நிறைவேற்றுவதில் பி.கே.ஆர் முன்னணி வகிக்க வேண்டும் என்றார் அவர்.
அதோடு கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் இனி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.
உதவித் தலைவர் தேர்தலில் நடப்பு உதவித் தலைவரும் மத்திய அமைச்சருமான நிக் நஸ்மி உட்ளிட்டோரை தோற்கடித்து ரமணன் இரண்டாவது இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
முதலிடத்தை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும், மூன்றாம் இடத்தை நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணும் பிடித்தனர்.
நான்காவது இடத்தை மற்றோர் உதவித் தலைவரான சாங் லீ காங் தற்காத்துக் கொண்டார்.
மாநில மந்திரி பெசாரையும் ஒரு மத்திய அமைச்சரையும் பின்னுக்குத் தள்ளி ரமணன் இரண்டாமிடத்தைப் பிடித்திருப்பது, பி.கே.ஆரில் அவரின் செல்வாக்கு வளர்ந்து வருவதைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்