
ஜோர்ஜ்டவுன், ஜூன்-25 – பினாங்கு போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைத் தாக்கியக் குற்றத்தை ஒப்புக் கொண்ட 19 வயது இளைஞனின் வாக்குமூலத்தை, ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
கடந்த ஞாயிறன்று இரவு 9.40 மணிக்கு மாநில போலீஸ் தலைமையக பாதுகாவலர் சாவடியில், 31 வயது Ahmad Jabarul Yahya-வைத் தாக்கியதே குற்றச்சாட்டாகும்.
இந்நிலையில், Ahmad Jabarul-லின் கன்னத்தில் குத்தி, அவரின் நெஞ்சைக் கடித்ததை நீதிமன்ற விசாரணையின் போது SR. ஐங்கரன் ஒப்புக் கொண்டார்.
அக்குற்றத்திற்கு அதிகபட்சம் ஓராண்டு சிறையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
ஆனால், குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகு, ஐங்கரனிடம் காண்பிக்கப்பட்ட சில புகைப்படங்களை அவரால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
இதனால், ஐங்கரனின் ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதாக, மேஜிஸ்திரேட் நூருல் சுஹாய்லா பஹாரின் அறிவித்தார்.
இதையடுத்து 3,000 ரிங்கிட் தொகையில் அவ்விளைஞனை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், ஜூலை 21-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.
சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாகக் கூறி ஐங்கரனும் அவரது கூட்டாளியும் கைதுச் செய்யப்பட்டு, விசாரணைக்காகப் பாதுகாவலர் சாவடிக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
அப்போது திடீரென ஆவேசமடைந்த அவ்விருவரும் போலீஸாரின் கன்னத்தில் குத்தி, நெஞ்சுப் பகுதியைக் கடித்துள்ளனர்.
அதோடு கெட்ட வார்த்தைகளாலும் போலீஸை திட்டியதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.