
ஜோர்ஜ் டவுன், ஏப் 28 – பினாங்கில் பெர்சியாரன் கர்பால் சிங் சாலையில், பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படும் காரணத்தால் மூன்று சக்கர மின்சார வாகனம் கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.50 அளவில் நடந்த அந்த சம்பவத்தில், 33 வயதான லிம் யோங் சியன் என்பவருக்கு வலது கையின் சுண்டு விரலில் எலும்பு முறிவும், பெருவிரலில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது.
அவரது மனைவி லோ ஜோ யிக்கு உள் காயங்களும், வலது கால் முழுவதும் வீக்கமும் ஏற்பட்டது.
அதே சமயம், அவர்களது 3 வயது மகளுக்கு நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. லிம்மும் , அவரது மனைவியும், அவர்களது இரண்டு மகள்களும் முன்னதாக நடைபாதைப் பகுதியில் இருந்த ஒரு ஆபரேட்டரிடம் இருந்து 20 நிமிடங்களுக்கு 40 ரிங்கிட் கட்டணத்தில் அந்த மின்சார வாகனத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது, அதன் வேகத்தைக் குறைக்க லிம் முயன்றபோதிலும் , பிரேக் சரியாக செயல்படவில்லை என்பதை அவர் கண்டறிந்தார்.
தொடர்ந்து அந்த மின்சார வாகனம் வேகமாகச் சென்றுகொண்டே இருந்ததால் இறுதியில் கட்டுப்பாட்டை இழந்து அது கவிழ்ந்ததில், நாங்கள் மூன்று பேரும் காயம் அடைந்தோம் என லிம் தெரிவித்தார்.
உறவினரின் உதவியுடன் பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
இதனிடையே அந்த மின்சார வாகன வாடகை நிறுவனம் ஆம்புலன்ஸை அழைக்க தவறியதோடு நடந்த சம்பவத்திற்கு எங்களை பழி சுமத்தியதால்
அந்த நிறுவனத்திற்கு எதிராக போலீசில் புகார் செய்திருப்பதாக லிம் தெரிவித்தார்.



