
செர்டாங், ஜூன்-16 – கடந்த செப்டம்பரில் காலமான கால்நடை மருத்துவரான இணைப் பேராசிரியர் டத்தோ Dr வெள்ளையன் சுப்பிரமணியம், மலேசிய கால்நடை மருத்துவத் துறையில் மிகவும் மதிக்கப்படுபவராவார்.
இந்நிலையில், அவரை கௌரவிக்கும் ஒரு நினைவுச் சொற்பொழிவு சனிக்கிழமை ஜூன் 14-ஆம் தேதி, UPM எனப்படும் மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவப் புலத்தின் ஆடிட்டோரியம் அரங்கில் நடைபெற்றது.
UPM-பின் நிறைநிலை பேராசிரியர் டத்தோ Dr ஷேக் ஓமார், UiTM-மின் மருந்தியல் புலத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ Dr அபு பாக்கார் மஜீத், மலேசிய ஒட்டுண்ணியியல் மற்றும் வெப்பமண்டல மருத்துவ சங்கத்தின் பேராசிரியர் Dr ஸ்டீபன் அம்பு, மலேசிய கால்நடை மருத்துவ சங்கத்தின் Dr அலி அன்வார் ஆகியோர் இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.
அதைத் தொடர்ந்து டத்தோ வெள்ளையனின் “A Lifetime As A Zoo Veterinarian” என்ற புத்தக வெளியீடும் அந்நிகழ்வில் இடம்பெற்றது.
ஒரு நினைவுக் குறிப்பான அந்நூல், தேசிய மிருகக்காட்சிசாலையில் மிக நீண்ட காலம் கால்நடை மருத்துவராக பணியாற்றிய அவரது 27 ஆண்டு கால அனுபவங்களை உள்ளடக்கியது.
தவிர, அவரது முக்கிய நம்பிக்கையான விலங்குகள் தாழ்ந்தவை அல்ல, ஆனால் பூமியில் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் “சக உயிரினங்கள்” என்ற கருத்தை அந்நூல் பகிர்ந்து கொள்கிறது.
கால்நடை மருத்துவத்தில் Dr வெள்ளையனின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், அவரின் புத்தகம் குறித்து, நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்கள் சிலர் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
Zoo Negara-வின் முன்னாள் தலைமை கால்நடை மருத்துவரான டத்தோ Dr வெள்ளையன், தமது 72-ஆவது வயதில் கடந்தாண்டு செப்டம்பரில் காலமானார்.
அவர், மிருகக்காட்சி சாலை மற்றும் அரிய விலங்குகளின் கால்நடை மருத்துவர் என்பதோடு UiTM பல்கலைக்கழகத்தில் மருந்தியல் புலத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சியாளரும் கூட…
மலேசிய உயிரியல் பூங்காக்கள், அரிய விலங்குகளுக்கான வசதிகள் மற்றும் ஆய்வுக் கூடங்களில் விலங்கு மேலாண்மை தரங்களை மேம்படுத்துவதிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது