
கோலாலம்பூர், செப்-15-இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாட்டில் 38 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சரவாக்கின் Serianனில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு API அதிகபட்சமாக 188 எனப் பதிவாகியுள்ளது.
தீபகற்பத்தில் சிலாங்கூரின் Johan Setiaவில் API 183 எனப் பதிவாகியுள்ளது. Shah Alam, Petaling Jaya, Klang, Banting, Kuala Selangor ஆகிய இடங்களிலும் API குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. ஜோகூரில் Pasir Gudang, Larkin, Tangkak, Kota Tinggi உள்ளிட்ட ஏழு பகுதிகளில் API குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறது.
கோலாலம்பூரில் செராஸ், பத்து முடா, புத்ராஜெயா, நெகிரி செம்பிலானின் நீலாய், சிரம்பான், போர்ட்டிக்சன், பஹாங்கில் 5 இடங்கள், திரங்கானு மற்றும் பேராக்கில் மூன்று பகுதிகள், மலாக்கா மற்றும் பினாங்கில் இரண்டு இடங்கள் ஆகியவற்றிலும் API குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
இவ்வேளையில் நாட்டில் 30 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கிறது. சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின்படி, 101 முதல் 200 வரையிலான அளவு ஆரோக்கியமற்றதாக வகைப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசம் அல்லது இதயப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. சுற்றுச்சூழல் துறையின் அடுத்தக்கட்ட அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.



