
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரான டத்தோ டி. முருகையா அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். நாட்டின் 5ஆது பிரதமராக சேவையாற்றியுள்ள துன் அப்துல்லா பணிவும், நேர்மையும் கொண்ட தலைவராக இருந்துள்ளார் . மிதவாதப் போக்கை கொண்டிருந்த அவர் தனது நிர்வாகத்தின்போது , நல்லாட்சி மற்றும் சமய வேறுபாடு இன்றி மலேசிய சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் சமய நல்லெண்ணத்திற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்துள்ளார்.
அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படையான , நேர்மையான நிர்வாக முறைக்கு முன்னுரிமை வழங்கிய அப்துல்லா, கல்வி மற்றும் மனித மூலதன மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக பங்கை ஆற்றியுள்ளார்.
NCER, ECER உட்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். அவரது சிறந்த சேவைகளையும் நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்கை மதித்து , கௌரவிக்கும் வகையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கத்திற்கு துன் அப்துல்லா அமகட் படாவியின் பெயரை வைத்தால் அது சிறப்பாக இருக்கும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் துணையமைச்சருமான முருகையா வலியுறுத்தினார்.