
கோலாலாம்பூர், ஜூன்-23 – அரச மலேசியப் போலீஸ் படையில் சேவையாற்றி வரும் இந்த 38 ஆண்டுகளிலும் தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது.
தேசியப் போலீஸ் படையின் புதியத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் அவ்வாறு தெளிவுப்படுத்தியுள்ளார்.
“அரசியலிலேயே இல்லை, அரசியல் கட்சியில் மட்டும் நான் எப்படி உறுப்பினராவேன்?” என அவர் வினவியுள்ளார்.
தமது பதவி நியமனம் தொடர்பில் infographics எனப்படும் தகவல் வரைபடத்தை வெளியிட்டு, அதில் தமது ‘அரசியல்’ ஈடுபாடு என உள்ளூர் மலாய் நாளேடு குறிப்பிட்டது குறித்து IGP அவ்வாறு கருத்துரைத்தார்.
அத்தவற்றுக்காக அந்நாளேடு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதுடன், தம்மை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவும் அனுமதிக் கேட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, போலீஸூக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சுமூக உறவு நிலவ வேண்டுமென்பதையும் டத்தோ ஸ்ரீ காலிட் வலியுறுத்தினார்.
பி.கே.ஆர் கட்சியின் உறுப்பினர் என புதிய IGP-யைத் தவறாகக் குறிப்பிட்டதற்காக, சம்பந்தப்பட்ட நாளேடு முன்னதாக மன்னிப்புக் கோரியது.
அதோடு அந்த வரைபடத்தை பதிவேற்றிய மற்றும் அங்கீகரித்த பணியாளர்களை இடைநீக்கமும் செய்துள்ளது.
புதிய IGP பி.கே.ஆர் உறுப்பினர் அல்ல என்பதை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பதவி ஓய்வுப் பெற்ற தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்னுக்குப் பதிலாக, தேசியப் போலீஸ் படையின் புதியத் தலைவராக டத்தோ ஸ்ரீ காலிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.