
மலாக்கா, ஜன 14 – மலாக்காவில் Bukit Rambai, தொழில்மயப் பகுதியில் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வெல்டிங் கருவி வெடித்ததில் ஒருவர் மரணம் அடைந்த வேளையில் மற்றொருவர் தீக்காயங்களுக்கு உள்ளானார். இது குறித்து தனது துறைக்கு பிற்பகல் மணி 1.32 க்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து 11 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி முகமட் ஹபித்சதுல்லா ரஷித்
( Mohd Hafidzatullah Rashid ) தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்த தீயணைப்பு குழுவினர் அங்கு 44 வயது ஆடவர் ஒருவர் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
மற்றொரு 32 வயது ஆடவர் உடலில் சுமார் ஐந்து விழுக்காடு தீக்காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து உடனடியாக மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கான சரியான காரணத்தை அடையாளம் காண தீயணைப்புத் துறை தற்போது விசாரணைகளை நடத்தி வருவதாக Mohd Hafidzatullah கூறினார்.



