
கோலாலம்பூர், மார்ச்-15-17 ஆண்டுகளாக தனது மகளைத் தேடி வரும் தாய் இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
மதம் மாறிய முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட இந்திராவின் மகள் பிரசன்னா தீக்ஷா வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி 18 வயதை அடைகிறார்.
சட்டத்தின் பார்வையில் 18 வயது என்பது, சொந்தமாக முடிவெடுக்கும் ஆற்றல் பெற்ற பெரியவராகக் கருதப்படுகிறது.
எனவே, 18 வயது மகளைத் தேடி கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்திரா காந்தியால் இனியும் கோர முடியாது.
இந்த உண்மை தமக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்ட போதே, தாம் உடைந்து அழுந்து விட்டதாகக் கூறிய 51 வயது இந்திரா காந்தி, இப்போதும் மனம் தளரவில்லை.
எப்படியாவது அதிசயம் நிகழ்ந்து மகளுடன் ஒன்று சேர்ந்து விட மாட்டேனா என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.
18 வயதானப் பிறகு மகளே இனி தன்னைத் தேடி வருவார், வரட்டும் என இந்திரா எதிர்பார்க்கிறார்.
“என் மகள் என்ன மதம் என்பது இனியும் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவளைப் பார்த்தாலே போதும்” என இந்திரா ஒரு தாயின் ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.
இஸ்லாத்துக்கு மதம் மாறிய இந்திராவின் முன்னாள் கணவர், ஒருதலைபட்டசமாக குழந்தைகளையும் மதம் மாற்றி, கடைசிப் பிள்ளையான பிரசன்னா தீக்ஷாவை 2009 ஆம் ஆண்டு, 11 மாத குழந்தையாக இருந்தபோது, எங்கோ அழைத்துச் சென்று விட்டார்.
அதன் பின்னர், குழந்தை எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
2018-ஆம் ஆண்டு, கூட்டரசு நீதிமன்றம் குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.
மேலும், குழந்தையை தாயிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்திரா காந்தியும் ஏறாத படிகள் இல்லை.
ஆனால், இந்த ஏப்ரலில் பிரசன்னா 18 வயதை அடைந்தவுடன், தான் எங்கு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து அவரே முடிவு செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மகளைத் தேடும் 17 ஆண்டு கால இந்திராவின் சட்டப் போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது…



