
ஜோகூர் பாரு, ஜூன்-26 – 2024 SPM தேர்வில் A- உட்பட 10 பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இடம் கிடைக்குமென்ற அமைச்சரவையின் உத்தரவாதத்தை, DAP தேசியத் துணைத் தலைவர் ங்கா கோர் மிங் வரவேற்றுள்ளார்.
இளம் மலேசியர்களுக்கு தரமான மேற்கல்வி கிடைப்பதை உறுதிச் செய்ய, தகுதிக்கே முன்னுரிமை, இன பாகுபாடு அல்லாத சமமான கல்வி வாய்ப்பு, உள்ளூர் திறமையாளர்களை அங்கீகரிப்பது ஆகியவற்றில், மடானி அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
கல்வித் தேர்ச்சிக்கு, நியாயமான முறையில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என, இதன் மூலம் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியையும் அரசாங்கம் கொடுத்துள்ளதாக, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
கடந்தாண்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த கடப்பாட்டுக்கு ஏற்ப அமைச்சரவையின் முடிவு அமைந்துள்ளதோடு, தேசியக் கல்வி முறை மீதான பொது மக்களின் நம்பிக்கையும் இதன் மூலம் வலுவடைந்துள்ளது.
இப்புதியக் கொள்கையின் மூலம் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற எந்த மாணவரும் மேற்கல்வி வாய்ப்பிலிருந்து விடுபடமாட்டார்கள்; அதே சமயம் பூமிபுத்ராக்களின் இட ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என அமைச்சரவை உத்தரவாதம் வழங்கியுள்ளது.
கல்வி அடைவுநிலைகளைக் கொண்டாடும் அதே சமயம், சமூக நீதியையும் நிலைநாட்டும் கொள்கைகளுக்கு DAP எப்போதுமே ஆதரவாக இருந்து வருமென்றும் ங்கா கோர் மிங் கூறினார்.
மெட்ரிகுலேஷன் விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், A- உட்பட 10 பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்குமென நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவானது.
இது குறிப்பாக இந்திய-சீன மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.