
புத்ராஜெயா, மே-16 – வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை மலேசிய உரிமங்களாக மாற்றுவதற்கான விண்ணப்பங்களை, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ மே 19 முதல் நிறுத்தவிருக்கிறது.
ஆக, மலேசிய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையுள்ள வெளிநாட்டினர், வரும் திங்கட்கிழமை முதல், அனைத்து மலேசியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பூர்த்திச் செய்தாக வேண்டும்.
என்றாலும், தூதரகப் பணியில் உள்ளவர்கள், ‘மலேசியா எனது இரண்டாவது இல்லம்’ திட்டத்தின் பங்கேற்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை மட்டுமே வைத்திருக்கும் மலேசியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கையானது, சாலைப் பாதுகாப்பை குறிப்பாக மலேசியச் சாலைகளில் வெளிநாட்டினரை உட்படுத்திய சம்பவங்களில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதென JPJ விளக்கியது.
12 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு மலேசியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு, அவர்களின் தாய் நாடு 1949 மற்றும் 1968 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து பிரகடனத்தில் கையெழுத்திட்டிருந்தால், தளர்வு வழங்கப்படும்.
அதாவது, அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வழங்கப்பட்ட அனைத்துலக ஓட்டுநர் அனுமதியுடன் மலேசியாவில் வாகனமோட்ட அனுமதிக்கப்படுவார்கள்.
அதே சமயம், ஆசியான் நாடுகளின் குடிமக்களுக்கு, அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தாலே போதுமானதாகும் என அது மேலும் கூறியது.