
கோலாலம்பூர், மே-13 – பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக ரஃபிசி ரம்லியோ அல்லது நூருல் இசா அன்வாரோ, யார் வெற்றிப் பெற்றாலும், இந்தியர்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
எதிர்கட்சியாக இருந்த போது அவர்கள் வழங்கிய வாக்குறுதியெல்லாம், இன்று அரசாங்கத்தில் இருக்கும் போது செயல்படுத்தப்படவில்லை.
ஒரு காலத்தில் பி.கே.ஆர் கட்சிக்கு முதுகெலும்பாக விளங்கியவர்கள் இந்தியர்கள்;
மலாய்க்காரர்கள் அம்னோவுக்கு விசுவாசமாகவும், சீனர்கள் DAP பக்கமும் இருந்த வேளை, இந்தியர்கள் மட்டுமே ‘ரிஃபோர்மாசி’ முழக்கங்களை நம்பி பி.கே.ஆர் -ரில் சேர்ந்தனர்.
ஆனால், இன்று இந்தியர்கள் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் எங்கே என சஞ்சீவன் கேள்வி எழுப்பினார்.
இந்தியர்கள் குறிப்பாக தோட்டப் புற இந்தியச் சமூகம் இன்னமும் ஏழ்மை நிலையில் வாழ்கிறது; மேற்கல்வி மற்றும் கல்வி உபகாரச் சம்பளங்களில் இந்திய மாணவர்களுக்கு உரிய சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்கென நீண்ட கால திட்டங்கள் இல்லை.
இது தவிர, குறு மற்றும் சிறு இந்திய வியாபாரிகள் இன்னமும் ஊராட்சி மன்றங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்; மறுகுடியேற்றத்திலும் புதிய வீடமைப்புத் திட்டங்களிலும் இந்தியர்களுக்கு நியாயமான இழப்பீடுகள் கிடைப்பதில்லை.
எனவே, துணைத் தலைவராக யார் வந்தாலும், நமக்கு என்ன வரப் போகிறது என சஞசீவன் வினவினார்