
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.02- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து கீழே விருந்திருக்கலாம் என நம்பப்படும் டயர் மோதி போலீஸ் வீரர் ஒருவர் உயிரிழந்தார். அச்சம்பவம் இன்று அதிகாலை 140.6 ஆவது கிலோமீட்டரில் Seberang Jaya அருகே நிகழ்ந்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் Dennis Lim தெரிவித்தார்.
காரையும் மோட்டார் சைக்கிளையும் உட்படுத்திய விபத்தொன்று குறித்து தங்களுக்கு காலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். Juruவிலிருந்து Seberang Jaya நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கார், சாலையின் நடுவே கிடந்த டயர் மீது மோதியதாக நம்பப்படுகிறது. அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுற ஓரத்தில் விலகி ஓடியது. அச்சமயத்தில் அதே திசையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வீரர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அந்த டயர் மீது மோதி அவர் கீழே விழுந்து சாலையோரம் இழுத்துச் செல்லப்பட்டதாக Dennis கூறினார்.
பெர்லிஸ் காவல்துறை தலைமையத்தில் பணி புரியும் அந்த 40 வயது போலீஸ் வீரர் தலையில் படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே மாண்டார். காரில் பயணித்த மூவர் காயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே விபத்துக்குக் காரணமான லாரி உரிமையாளர் தேடப்படுகிறார்.



