
கொழும்பு, ஏப்ரல்-27-குட்டித் தீவு நாடான இலங்கை தனது கடன் சுமையைக் குறைப்பதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளது.
உலகின் ‘மிகவும் வெறிச்சோடிய விமான நிலையம்’ என அழைக்கப்படும் மத்தள ராஜபக்ஷே அனைத்துலக விமான நிலையத்தை விற்பனை செய்ய அல்லது குத்தகைக்கு விட அந்நாட்டரசு புதிய முதலீட்டாளர்களைத் தேடி வருகிறது.
சுமார் 200 மில்லியன் டாலர் சீனக் கடனுதவியுடன் கட்டப்பட்டு, 2013-ல் திறக்கப்பட்டதிலிருந்தே இந்த விமான நிலையம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
தற்போது இங்கு வழக்கமான விமானச் சேவைகள் ஏதுமில்லை.
இந்த விமான நிலையம் ஈட்டும் வருமானம், அதன் மாதாந்திர மின்சாரக் கட்டணத்தைக் கூட ஈடுகட்டப் போதுமானதாக இல்லை.
இதனால் இது இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் சுமையாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டு நிறுவனத்துடன் பேசப்பட்ட 30 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தம் தோல்வியில் முடிந்த நிலையில், இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், ஓடுதளத்தில் யானைகள் மற்றும் எருமைகள் புகுந்து விடுவதைத் தடுக்க இராணுவம் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன.
2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க இலங்கை முயன்று வருகிறது.
இந்த ‘வெள்ளை யானை’ திட்டத்தை ஒரு சுற்றுலா மையமாக மாற்றப்போகும் அந்தப் புதிய முதலீட்டாளர் யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…



